நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம் அறிவித்திருப்பது பற்றி...
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருவதாகவும், நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, போராட்டம் நடத்த இருப்பதாகவும் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர்.
தொடங்கிய சில நாள்களிலேயே, அதன் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. இதனையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.
Advertisement
Advertisement
முடக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் புதியதொரு எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்டது. அந்தக் கட்சி சில நாள்களுக்கு முன்பு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே வெளியிட்டிருக்கும் விடியோ ஒன்றில் பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பின் வழியைப் பின்பற்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, அமைதியான முறையில் நமது குரல்களை எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல்களை எழுப்பினால், நிச்சயமாக நமது குரல்களுக்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
நான் வரும் ஜூன் 6 ஆம் தேதி காலையில் தில்லிக்கு வர உள்ளேன். தயவுசெய்து, விமான நிலையத்தில் என்னுடன் வந்து சேருங்கள். அங்கிருந்து நாம் ஒன்றாக நாடாளுமன்றத் தெருவில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்று, ஜந்தர் மந்தரில் அமைதியான போராட்டம் நடத்த அனுமதி கேட்போம் என்று அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் கொடுக்கப்பட்ட நீட் வினாத்தாள், தேர்வுக்கு முன்பே கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டது. எனவே அந்தத் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வுக்கான தேதியாக வரும் ஜூன் 21-ஐ தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
இதனால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தது குறிப்பிடத்தக்கது.