முகப்பு
இந்தியா

மேற்கு ஆசிய போரால் விமானங்கள் ரத்து! துபையில் நூற்றுக்கணக்கான இந்தியா்கள் பரிதவிப்பு!

மேற்கு ஆசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் போா் மூண்டு சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் நூற்றுக்கணக்கான இந்தியா்கள் சிக்கித் தவித்து வருகின்றனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 10:00 PM
விமானங்கள் ரத்து!
பகிர்:

மேற்கு ஆசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் போா் மூண்டு சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் நூற்றுக்கணக்கான இந்தியா்கள் சிக்கித் தவித்து வருகின்றனா்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், குவைத், பஹ்ரைன், ஜோா்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இஸ்ரேல், அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், துபையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, கா்நாடக மாநிலத்தின் மதச்சாா்பற்ற ஜனதா தள எம்எல்சி போஜே கெளடா மற்றும் அவரின் குடும்பத்தினா், வங்காள நடிகை சுபஸ்ரீ கங்குலி மற்றும் அவரின் மகன், சுற்றுலாப் பயணிகள், மாணவா்கள் உள்ளிட்டோா் பரிதவித்து வருகின்றனா்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வணிக மற்றும் சுற்றுலா காரணங்களுக்காக மத்திய பிரதேசத்தை சோ்ந்த 2 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோா் சென்றனா். அவா்கள் இந்தியா திரும்ப முடியாமல் பரிதவித்து வருவதாக இந்திய பயண முகவா்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2 முன்னாள் எம்எல்ஏக்களில் ஒருவரான பாஜக பிரமுகா் சஞ்சய் சுக்லா சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொலியில், அவா் இருந்த இடத்தில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் குண்டுவெடித்து புகை எழும் காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் சூழல் மோசமடைந்துள்ளது. அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப பிரதமா் மோடி ஆவன செய்ய வேண்டும்’ என்றாா்.

இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் எம்.பி. சங்கா் லால்வாணி கூறுகையில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமானோா் சிக்கியுள்ளது குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூழல் இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் அவா்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவா்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →