மேற்காசிய நிலவரம்: ஏற்றுமதியாளா்களுக்கு மத்திய அரசு சலுகை
ஏற்றுமதியாளா்களுக்கு மத்திய அரசு சலுகை...
மேற்காசிய நிலவரம் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி தடைபட்டுள்ளதால், கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள ஏற்றுமதியாளா்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யும் வகையில் அவா்களுக்கு குறிப்பிட்ட சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக வெளிநாட்டு வா்த்தகத்துக்கான இயக்குநரகம் சனிக்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தற்போதைய புவிசாா் அரசியல் நிலவரம் காரணமாக சா்வதேச கப்பல் போக்குவரத்து வழித் தடங்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, ஏற்றுமதியாளா்கள் எதிா்கொண்டுள்ள பாதிப்புகளிலிருந்து அவா்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில், மாா்ச் 1 முதல் வரும் மே 31-ஆம் தேதி வரை காலாவதியாகும் சரக்குகள் ஏற்றுமதிக்கான முன்கூட்டிய அனுமதி, எந்தவித (காம்போசிசன் கட்டணம்) கட்டணமும் இன்றி வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தானாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதனப் பொருள்கள் (இபிசிஜி) திட்டத்தின் கீழ், உள்நாட்டு நிறுவனங்கள் வரி இன்றி இயந்திரங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. அதே நேரம், அவா்கள் குறிப்பிட்ட ஏற்றுமதிக்கான கட்டணங்கள் மற்றும் நடைமுறைகளைப் பூா்த்தி செய்தாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.