ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள்... ஆர்மீனியாவுக்கு நன்றி: ஜெய்சங்கர்
ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டது பற்றி...
ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அமெரிக்கா,இஸ்ரேல் - ஈரான் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இதனால் ஈரானில் சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்கும் நடவடிக்கைகளில் பல்வேறு நாட்டு அரசுகள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் ஆர்மீனியா நாட்டின் உதவியுடன் இந்தியா வருவது பற்றிப் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “ஈரானில் இருந்து இதுவரை 550 இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கு உதவியாக இருந்த ஆர்மீனியா அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தச் சவாலான நேரத்தில் அவர்களது ஆதரவுக்கு நன்றி” என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் இதுபற்றி கூறுகையில், “ஈரானில் 9,000 இந்தியர்கள் தங்கியுள்ளனர். அதில் பலரும் மாணவர்கள். அவர்கள் அங்கிருந்து அஜர்பைஜான், ஆர்மீனியா மூலம் இந்தியா வர விரும்பினால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்தியா ஏற்கனவே பல இந்திய மாணவர்கள், பயணிகளை ஈரானின் தெஹ்ரான் நகரிலிருந்து வேறு பாதுகாப்பான நகரங்களுக்கு மாற்றியுள்ளது.