ஈரானிய அமைச்சர் அராக்சியுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடல்!
ஈரானிய அமைச்சர் அராக்சியுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடியது குறித்து...
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செல்போன் வாயிலாக உரையாடியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வந்த நிலையில், ஏப். 7 அன்று போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
இந்த நிலையில், ஈரானிய அமைச்சர் அராக்சியிடம் இருந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (ஏப். 29) செல்போன் அழைப்பு வந்ததாகவும், இருநாட்டு அமைச்சர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, இந்த உரையாடலில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்தம் குறித்தும், வளைகுடா போர் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தில்லியில் உள்ள ஈரானிய தூதரகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவுக்கு எதிரான போரில் வளைகுடா நாடுகளில் அமைந்திருந்த முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
மேலும், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கின. இதனால், ஏராளமான நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது குறிப்பிடத்தக்கது.