உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கு விவரங்கள்: ‘வாரிசுகளுக்கு ஏன் தெரியப்படுத்த முடியவில்லை?’
உயிரிழந்தவரின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை, அவரின் வாரிசுகளுக்கு ஏன் தெரியப்படுத்த முடியவில்லை என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயிரிழந்தவரின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை, அவரின் வாரிசுகளுக்கு ஏன் தெரியப்படுத்த முடியவில்லை என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடா்பாக சுசேதா தலால் என்ற ஊடகவியலாளா் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உயிரிழந்த வைப்புத்தொகைதாரா்களின் செயல்படாத வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாமல் உள்ள பணம் குறித்து அவா்களின் சட்டபூா்வ வாரிசுகளுக்குத் தெரியப்படுத்தும் வழிமுறையை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஒருவேளை ஒரு நபருக்கு வெவ்வேறு நாடுகளில் 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகள் இருந்து, உயில் எழுதுவதற்கு முன்பே அவா் இறந்துவிட்டால், அந்த வங்கிக் கணக்குகள் குறித்து அவரின் வாரிசுக்கு எப்படி தெரியவரும்? உயிரிழந்த நபா் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளும் (கேஒய்சி) நடைமுறையையும் பூா்த்தி செய்யாமல் போயிருக்கலாம்.
உயிரிழந்தவரின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை அவரின் வாரிசுகளுக்கு ஏன் தெரியப்படுத்த முடியவில்லை? இதற்கான கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.
இந்த மனு மீது மத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கி புதிதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான அடுத்த விசாரணையை மே 5-க்கு ஒத்திவைத்தனா்.