பாஜகவின் கடும் சவாலைச் சமாளிக்க வியூகம்: வடக்கு மாவட்டங்களில் மம்தா; தெற்கில் அபிஷேக் தனித்தனியே பிரசாரம்!
பாஜக செல்வாக்குமிக்க வடக்கு வங்கத்தில் மம்தா தீவிர பிரசாரம்
மேற்கு வங்கத்தில் பாஜகவின் கடும் சவாலைச் சமாளிக்க திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் வியூகத்தை வகுத்து தீவிர பிரசாரத்தை தொடங்கவுள்ளது.
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இருகட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதியும், மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதியும் என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வரும் தேர்தலில், அம்மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி பவானிபூா் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில், பாஜகவின் முதல்வர் முகமாகக் கருதப்படும் மேற்கு வங்கப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுவதால் வங்கத் தேர்தலில் மையப்புள்ளியாக கவனம் ஈர்க்கிறது கொல்கத்தாவின் பவானிபூர் பேரவைத் தொகுதி.
இந்நிலையில், வடக்கு வங்கத்தில் பாஜகவின் கடும் சவாலைச் சமாளிக்க திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் வியூகத்தை வகுத்து தீவிர பிரசாரத்தை தொடங்கவுள்ளது. அந்த வகையில், பாஜக செல்வாக்குமிக்க வடக்கு மாவட்டங்களில் மம்தா பானர்ஜியும், திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலரும் அக்கட்சியின் தேர்தல் பிரசார வகுப்பாளருமான அபிஷேக் பானர்ஜி தெற்கு மாவட்டங்களிலும் தனித்தனியே பிரசாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் வடக்கு வங்கத்தில் மார்ச் 24-இல் அலிபூர்துவார் அணிவகுப்புத் திடலிலிருந்து மாபெரும் பேரணியுடன் பிரசாரத்தை மமதா தொடங்குவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்நாளிலேயே டார்ஜிலிங் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு வங்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 பேரவைத் தேர்தலில், தன் பலமான இருப்பைப் பதிவுசெய்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாகக் களமிறங்கியுள்ள பாஜகவின் கடுமையான சவாலைச் சமாளிக்க திரிணமூல் காங்கிரஸ் மேற்கண்ட வியூகத்தை வகுத்துச் செயல்படவிருக்கிறதாம்.
வடக்கு வங்கத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தன் செல்வாக்கை அதிகரித்தபோதிலும், பேரவைத் தேர்தலில் ராஜ்பன்ஷி, பழங்குடியினர் மற்றும் இடம்பெயர்ந்தோர் சமூகங்களின் வாக்குகளை பாஜக தன் வசப்படுத்திக்கொள்ளும் என்றே அம்மாநில கள அரசியலை நன்குணர்ந்த தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.