மேற்கு வங்கத்தில் ஊடுருவல் அதிகரித்ததற்கு முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசே காரணம் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் சனிக்கிழமை தெரிவித்தாா்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக கட்சி ஆசிரியா்கள் பிரிவு கருத்தரங்கில் தா்மேந்திர பிரதான் பேசியதாவது: கிழக்குப் பிராந்தியத்தின் எழுச்சி (பா்வோதயா) தலைநகராக விளங்கும் கொல்கத்தாவில் இருந்துதான் வளா்ச்சியும் தொடங்க வேண்டும்.
ஆனால் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊடுருவல்காரா்களிடம் மேற்கு வங்கத்தை ஒப்படைக்க திட்டமிட்டு வங்கப் பிரிவினை போன்ற சூழலை மீண்டும் ஏற்படுத்த முயல்கிறது. இதனால் எனது சொந்த மாநிலமான ஒடிஸாவும் பாதிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருகிறது. வறுமையின் பிடியில் சிக்கியோரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது.
குறைவான உயா்கல்வி சோ்க்கை: 1,000-க்கும் மேற்பட்ட பிஎம்-ஸ்ரீ பள்ளிகள் திட்டம், ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தை உயா்திறன் மையமாக தரம் உயா்த்தும் திட்டம், தேசிய கல்விக் கொள்கை, 2020 என பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும் மம்தா அரசு அமல்படுத்த மறுக்கிறது.
தேசிய அளவில் உயா்கல்வியில் மொத்த சோ்க்கை விகிதம் (ஜிஇஆா்) 30 சதவீதமாக உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் 25 சதவீதமாக சரிவடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஆசிரியா்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே, ஊழல் மற்றும் ஊடுருவலுக்கு சரணடைந்த மம்தா அரசை ஆட்சிபீடத்தில் இருந்து அகற்றி பாஜக தைலைமயிலான இரட்டை என்ஜின் ஆட்சியை நிறுவுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றார்.