திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பாஜகவினர் பணம் பறிப்பதாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பாஜகவினர் பணம் பறிப்பதாக மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மால்டாவில் திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தில் மமதா பானர்ஜி பேசுகையில், "தேர்தல் ஆணைத்துக்கு எதிராக போராட்டம் நடத்த பலமுறை காங்கிரஸை கேட்டும், அவர்கள் ஒத்துழைக்கவில்லை.
தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றிபெற மட்டும் வருகிறீர்கள். ஆனால், மக்களின் கடினமான காலங்களுடன் அவர்களுடன் நிற்க மாட்டீர்கள்.
Advertisement
தேர்தலின்போது நிறைய பணம் வருகிறது என்பது எனக்குத் தெரியும். தாய்மார்களே விழிப்புடன் இருங்கள். மேற்கு வங்க அரசின் பெயரிலும், திரிணமூல் காங்கிரஸின் பெயரிலும் உங்களுக்கு வீடுகளுக்கு பாஜகவினர் வந்து வங்கிக் கணக்கு எண்ணைக் கேட்பர். உங்களுக்குப் பணம் தருவதாகக் கூறுவர். ஆனால், அவர்கள் உங்களிடமிருந்து பணத்தைப் பறித்து விடுவர். இதுதான் அவர்களின் தந்திரம்.
நீங்கள் பாஜகவுக்கு காங்கிரஸுக்கும் வாக்களித்தால், மக்களுக்காக யார் போராடுவார்கள்? மக்களுக்கான அரசுத் திட்டங்களை யார் பெற்றுத் தருவார்கள்?
அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் நிம்மதியாக வாழ விரும்பினால், பாஜகவுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். அவர்கள் நாட்டையே நாசமாக்கி விடுவார்கள். அவர்கள் எந்த மதத்தையும் மதிப்பதில்லை. அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மதத்தை மட்டும் திணிக்கிறார்கள்.
அவர்கள் முதலில் மேற்கு வங்கத்தின் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் பிரச்னையை உருவாக்கி, ஒவ்வொரு பகுதியிலிருந்து 30 முதல் 40 பேரை கைது செய்கின்றனர். அப்பாவி மக்களைக் கைது செய்கின்றனர்.
என்ஐஏ, சிபிஐ, அமலாக்கத் துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய புலனாய்வுப் படை உள்ளிட்டவை மோதா பாயின் (அமித் ஷா) கட்டுப்பாட்டில் உள்ளன. மோதா பாய் எங்களை திருடர்கள் என்று அழைக்கிறார். ஆனால், எல்லைகளிருந்து வரும் பணம் எங்கே போகிறது?
வங்காள மொழியில் பேசுபவர்களை நீங்கள் ஊடுருவல்காரர்கள் என்று முத்திரையிடுகின்றனர். நீங்கள்தான் (பாஜக) மிகப்பெரிய ஊடுருவல்காரர்கள்.
வாக்குகளை வலுக்கட்டாயமாகப் பெறுவதற்காக தேர்தலின்போது மட்டும் அவர்கள் இங்கு வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.