திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காங்கிரஸில் இணைந்தார்!
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த எம்.எல்.ஏ. குறித்து...
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காஜி அப்துர் ரஹீம் அக்கட்சியிலிருந்து விலகிய மறுநாளே காங்கிரஸில் இணைந்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், அனைத்து தரப்பு கட்சி வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தின் பதுரியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ரஹீமுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து, அவர் தனது எம்.எல்.ஏ பதவி உள்பட கட்சியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) ராஜிநாமா செய்தார்.
ராஜிநாமா செய்த அடுத்த நாளே, காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் பலர் முன்னிலையில் அவர் காங்கிரஸில் ஐக்கியமானார். இதனைத்தொடந்து, பதுரியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரஹீம் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, காஜி அப்துர் ரஹீம் பேசுகையில், “என் தந்தை 50 ஆண்டுகளாக மேற்கு வங்க அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவே இருந்தார். காங்கிரஸில் இணைவதன் மூலம் நான் என் சொந்த வீட்டுக்கே திரும்புகிறேன். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்தார்.