அவர் சிங்கம் என்றால் நான் புஷ்பா: ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் போராட்டம்!
ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியது குறித்து...
உத்தரப் பிரதேச ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் இல்லத்துக்குச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் ஷர்மா, திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களையும் தலைவர்களையும் அச்சுறுத்துவதாகக் குற்றம்சாட்டி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஃபால்டாவில் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) போராட்டம் நடத்தினர்.
Advertisement
தொகுதியில் உள்ள மக்களிடம் இருந்து ஜஹாங்கீர் கானின் ஆதரவாளர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு அவர்களை மிரட்டுவதாகத் தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள் வந்ததை அடுத்து, ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் ஷர்மா அப்பகுதிக்குச் சென்றதாகத் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ஜஹாங்கீர் கான், “இது மேற்கு வங்கம், அவர் 'சிங்கம்' என்றால், நான் 'புஷ்பா'. பாஜக நியமித்த, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளின் எந்த விதமான அச்சுறுத்தலோ அல்லது வற்புறுத்தலோ ஃபால்டாவில் அனுமதிக்கப்படாது. அவர்கள் படையினருடன் வந்து, என் மக்களுக்கும் எனக்கும் அழுத்தம் கொடுக்க முயன்றனர். ஒரு ஜனநாயக அமைப்பில் இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" எனத் தெரிவித்தார்.
அந்த ஐபிஎஸ் அதிகாரி தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.