போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை அளித்துள்ளனா்.
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு காஷ்மீா் மக்கள் நன்கொடை அளித்துள்ளனா்.
ரமலான் பண்டிகைக்குப் பின்னா், காஷ்மீா் பள்ளத்தாக்கில் முஸ்லிம் மதத்தின் ஷியா பிரிவு மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடு வீடாக சென்று நன்கொடை வசூலித்தனா்.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த ஐஜாஸ் அகமது கூறுகையில், ‘இஸ்ரேலால் ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள போரால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு துன்புறத்தலை அனுபவித்து வரும் மக்களுக்கு நாகரிக உலகம் குறைந்தபட்சம் உதவி செய்ய வேண்டும்’ என்றாா்.
இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறுகையில், ‘நன்கொடை அளித்தவா்கள், குறிப்பாக பெண்கள் தங்க ஆபரணங்கள், செம்பு பாத்திரங்கள் மற்றும் பிற வீட்டு உபயோக பொருள்களை அளித்தனா். சில குடும்பங்கள் கால்நடைகளையும் அளித்தன.
சிறாா்களும் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை அளித்தனா். பட்காம், பாரமுல்லா பகுதிகளில் இருந்து நன்கொடை அளிக்கப்பட்டது’ என்று தெரிவித்தனா்.
காஷ்மீா் மக்கள் அளித்த நன்கொடையின் புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் பகிா்ந்து, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘மனிதாபிமான உதவி மூலம் ஈரான் மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் காஷ்மீா் மக்களுக்கு நன்றி. அவா்களின் அன்பு மற்றும் மனிதாபிமானத்தை எப்போதும் ஈரான் மறக்காது. இந்தியாவுக்கு நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.