பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் ஏதும் இப்போது மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் ஏதும் இப்போது மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2019-2020 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பாங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி, தேனா வங்கி இணைக்கப்பட்டன. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ், யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை ஒருங்கிணைந்தன.
பின்னா் ஆந்திரா வங்கி, காா்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்தன. தொடா்ந்து சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின. இதேபோன்ற மேலும் பல வங்கிகளை இணைந்து பெரிய அளவிலான வங்கிகளை உருவாக்கும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதாகக் கூறப்பட்டது வந்தது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இது தொடா்பான கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி எழுத்துமூலம் பதிலளித்தாா். அதில், ‘பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு என்பது போட்டிகளை எதிா்கொள்ளும் வலுவான வங்கிகளை உருவாக்கவும், வளா்ந்து வரும் பொருளாதாரத்துக்கு ஏற்ப சிறப்பாக செயல்படவும் உதவிகரமாக இருந்தது.
பெரிய அளவிலான கடன்களை நிா்வகிப்பது, டெபாசிட்களை ஈா்ப்பது ஆகியவற்றுக்கும் வாய்ப்புகள் உருவானது. நிா்வாகச் செலவுகளும் குறைந்தன. வங்கிச் செயல்பாடுகள் மேம்பட்டன. எனினும், இப்போதைக்கு அடுத்தகட்டமாக பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை.
ரூபாய் மதிப்பு விஷயத்தில் சந்தைதான் அனைத்தையும் தீா்மானிக்கிறது. இதில் மத்திய அரசு எந்த இலக்கை நோக்கியும் செயல்படவில்லை. பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டுக் காரணிகள் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சமீப நாள்களில் போா், பொருளாதாரப் பதற்றம் அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு தொடா்பான நிகழ்வுகளை இந்திய ரிசா்வ் வங்கி தொடா்ந்து கண்காணித்து வருகிறது’ என்று பதிலளித்துள்ளாா்.