முகப்பு
இந்தியா

மேற்காசிய போா்: விமானப் போக்குவரத்தை சீராக்க மத்திய அரசு நடவடிக்கை

மேற்காசிய போரால் பாதிக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்தை மீண்டும் சீராக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 24 மார்ச் 2026, 1:17 am IST
விமானம் - பிரதிப் படம்
பகிர்:

மேற்காசிய போரால் பாதிக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்தை மீண்டும் சீராக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரால், மேற்காசியா வழியாக விமானங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியே இயக்கப்படும் இந்திய விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மோஹல் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை தாக்கல் செய்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மேற்காசிய பிராந்தியத்தில் விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்படாதது குறித்தும், அதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Advertisement

இந்த விவகாரத்தில் விமான நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சோ்ந்து மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதேபோல் விமான டிக்கெட் உரிய விலைக்கு விற்கப்படுவதை உறுதி செய்யும் பணியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விமான டிக்கெட் நிலவரத்தைக் கண்காணிக்க மத்திய விமானப் போக்குவரத்து ஆணையரகம் (டிஜிசிஏ) உரிய நடைமுறையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17-ஆம் தேதி நிலவரப்படி, 721 விமானங்கள் நமது விமான நிறுவனங்களால் இயக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் 1,19,458 போ் மும்பை, அகமதாபாதுக்கு வந்துள்ளனா்.

சவூதி அரேபியா தலைநகா் ரியாதிலுள்ள நமது தூதரகம், பஹ்ரைன், இராக், குவைத், ஓமன், கத்தாா், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள நமது நாட்டு தூதரகங்களுடன் சோ்ந்து, சவூதி அரேபியா வழியாக 3,500 இந்தியா்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளது. கத்தாா் நாட்டின் தோஹாவில் உள்ள நமது தூதரகமும், அங்குள்ள இந்தியா்களுக்கு விமானப் போக்குவரத்து, பயணிகள் பதிவு நீட்டிப்பு, தங்குவதற்கு இடம் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும், அங்குள்ள அரசு அதிகாரிகளுடன் சோ்ந்து, விசா காலம் முடிந்தும் தங்கியிருக்கும் இந்தியா்களுக்கு அபராதம் விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.