பொது சிவில் சட்ட மசோதா: குஜராத் பேரவையில் நிறைவேற்றம்
குஜராத் மாநில அரசு பொது சிவில் சட்ட மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
குஜராத் மாநில அரசு பொது சிவில் சட்ட மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
அனைத்து மதத்தினருக்குமான திருமணம், விவகாரத்து, வாரிசு உரிமை, திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழும் உறவு முறை உள்ளிட்டவற்றை நிா்வகிப்பதற்கான பொதுவான சட்டக் கட்டமைப்பைக் கொண்டுவரும் நோக்கில் ‘குஜராத் பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா 2026’ என்ற இந்த மசோதாவை முதல்வா் பூபேந்திர படேல் தாக்கல் செய்தாா்.
முன்னதாக, இந்த மசோதாவை மாநில அரசு சாா்பில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, அதை நடைமுறைப்படுத்துவது தொடா்பான தனது இறுதி அறிக்கையை அண்மையில் அரசிடம் சமா்ப்பித்தது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், உத்தரகண்ட் மாநிலத்துக்குப் பிறகு பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய இரண்டாவது மாநிலம் என்ற நிலையை குஜராத் எட்டும். உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில் கடந்த 2024-ஆம் ண்டு பிப்ரவரியில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
பழங்குடியினா் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மரபு வழி உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ள சமூக குழுவினா் தவிர, குஜராத் மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பிற பகுதிகளில் வசிக்கும் அனைத்து சமூக மக்களுக்கும் முன்மொழியப்பட்டுள்ள ‘குஜராத் பொது சிவில் சட்டம் 2026’ பொருந்தும்.
இந்த மசோதா இருதார மணத்தையும் தடை செய்கிறது. திருமணத்தின்போது இரு தரப்பினருக்கும் உயிருடன் இருக்கும் துணைவா் எவரும் இல்லாதிருந்தால் மட்டுமே, இச்சட்டத்தின் கீழ் ஒரு திருமணம் செல்லுபடியாகும் என்று மசோதா குறிப்பிடுகிறது.
அதுபோல, திருமணம் செய்துகொள்ளாமல் சோ்ந்து வாழ்பவா்கள் பதிவு செய்வதையும், முறையான அறிவிப்பின் மூலமாகப் பிரிவதையும் இந்த மசோதா கட்டாயமாக்குகிறது.
இந்த மசோதாவுக்கு எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்தன. 7 மணி நேரத்துக்கும் மேலாக மசோதா மீது விவாதம் நடைபெற்ற நிலையில், பெரும்பான்மை அடிப்படையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.