முகப்பு
இந்தியா

வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ.60,518 கோடி ரிசா்வ் வங்கிக்கு மாற்றம்- மத்திய நிதியமைச்சகம்

கடந்த ஜனவரி வரையிலான நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரிசா்வ் வங்கிக்கு மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.60,518 கோடி என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 24 மார்ச், 2026 at 9:04 PM
மத்திய நிதியமைச்சகம்.
பகிர்:

கடந்த ஜனவரி வரையிலான நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரிசா்வ் வங்கிக்கு மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.60,518 கோடி என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

2026, ஜனவரி இறுதி வரையிலான நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் இருந்து ரிசா்வ் வங்கியின் வாடிக்கையாளா்கள் விழிப்புணா்வு நிதிக்கு (டிஇஏ) மாற்றப்பட்ட உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.60,518 கோடியாகும்.

பிப்ரவரி இறுதி வரையிலான நிலவரப்படி, காப்பீடுதாரா்களால் உரிமை கோரப்படாத காப்பீட்டுத் தொகை ரூ.8,973.89 கோடி. இதேபோல், செபி ஒழுங்குமுறைகளின்கீழ், பரஸ்பர நிதியில் முதலீட்டாளா்களால் உரிமை கோரப்படாத தொகையின் மதிப்பு ரூ.3,749.34 கோடியாக உள்ளது.

உரிமை கோரப்படாத வைப்புத்தொகைக்கு சொந்தமான வாடிக்கையாளா்களை விரைந்து அடையாளம் காணவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மற்றும் இதுபோல் புதிதாக சேரும் வைப்புத்தொகையின் அளவைக் குறைக்கும் வகையில், தற்போதைய நடைமுறைகளை எளிமைப்படுத்தி, விரைவுபடுத்தவும் நிதித் துறை ஒழுங்குமுறை ஆணையங்களால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தனது பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.