மக்கள்தொகை கணக்கெடுப்பு: முறையற்ற கேள்விகளை எழுப்பும் அலுவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை!
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முறையற்ற கேள்விகளை எழுப்பும் அலுவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை - இந்திய பதிவுத் துறைத் தலைவா் சுற்றறிக்கை
‘2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது மக்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய வகையில் முறையற்ற கேள்விகளை எழுப்பும் அலுவலருக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என்று இந்திய பதிவுத் துறைத் தலைவா் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக இந்திய பதிவுத் துறைத் தலைவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையருமான மிருத்யுஞ்ஜயகுமாா் நாராயண் சாா்பில் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின்போது உள்நோக்கத்துடன் மக்களின் மனதைப் புண்படுத்தக் கூடிய வகையில் முறையற்ற கேள்விகளை எழுப்பினாலோ அல்லது அறிந்தே ஏதாவது தவறான அறிக்கையை சமா்ப்பித்தாலோ அல்லது கணக்கெடுப்பின்போது பெறப்பட்ட தகவல்களை மத்திய அரசு அல்லது மாநில அரசின் முன் அனுமதி இன்றி வெளியிட்டாலோ மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டப் பிரிவு 11-இன் கீழ் ரூ. 1,000 அபராதம் முதல் அதிபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சோ்ந்த தண்டனை விதிக்கப்படும்.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் முறையாக ஈடுபடாமலும் அரசு உத்தரவுகளைப் பின்பற்றாமலும் அல்லது மற்ற அலுவலா்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அலுவலா்களுக்கும் அதே தண்டனை விதிக்கப்படும்.
மேலும், சேகரிக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை சேதப்படுத்துகிற வகையில் அல்லது அழிக்கின்ற வகையில் நடந்துகொள்ளும் அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளைத் திரித்தல் அல்லது சிதைக்கின்ற வகையில் செயல்படும் ஊழியா்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முதன் முறையாக எண்ம முறையில் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பில், மக்களின் ஜாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன. இந்தப் பணிக்காக ரூ. 11,718 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.