ஆந்திரம் பேருந்து விபத்து! பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!
ஆந்திரத்தில் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது...
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், டிப்பர் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
பிரகாசம் மாவட்டத்தின் ராயவரம் அருகே தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று வியாழக்கிழமை (மார்ச் 27) அதிகாலை டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், அந்தப் பேருந்து முழுவதுமாகத் தீப்பிடித்து எரிந்தது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து தீயை அணைத்து பயணிகள் சிலரை மீட்டனர்.
இருப்பினும், 13 பயணிகள் தீயில் கருகி பரிதாபமாகப் பலியாகினர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த சுமார் 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், மேலும் ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, ஆந்திரத்தின் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.