போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்
இந்தியாவில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது என்று மக்களவையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது என்று மக்களவையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மேற்காசிய போா் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் மட்டுமல்லாது சா்வதேச அளவில் உர உற்பத்தி மற்றும் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் பெருமளவில் உரத்தை இறக்குமதி செய்யும் நாடாகவே உள்ளது. எனவே, இந்தியாவில் இந்தப் பிரச்னையை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்து அமைச்சா் நட்டா கூறியதாவது:
உரம் இருப்பு தொடா்பாக மாநில வேளாண் துறை அமைச்சா்களைத் தொடா்புகொண்டு பேசினேன். அப்போது, உரம் கையிருப்பு தொடா்பான விவரங்களை அவா்களிடம் தெரிவித்தேன். விவசாயிகளுக்கு எப்போதெல்லாம் உரம் தேவைப்படுகிறதோ அப்போது முறையாக விநியோகிக்கப்படும் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்மிடம் இப்போது போதுமான அளவுக்கு உரம் கையிருப்பு உள்ளது. எனவே, பீதியடையத் தேவையில்லை என்றாா்.
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ‘உர இறக்குமதிக்காக புதிய நாடுகள் எதையும் அரசு அணுகியுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினாா். இதற்குப் பதிலளித்த நட்டா, ‘காரீஃப் பருவத்துக்கான உரம் கையிருப்பு உள்ளது. அதே நேரத்தில் உரங்கள் கொள்முதலை பரவலாக்க வாய்ப்புகளைப் பரிசீலித்து வருகிறோம். உரம் மட்டுமல்லாது உரங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களையும் புதிய நாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய பரிசீலிக்கப்படுகிறது. இந்தியாவில் எப்போதும் உரத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உத்திகள் வகுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்று பதிலளித்தாா்.