அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளது குறித்து...
பிரான்ஸ் நாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில், வளைகுடா போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரான்ஸின் செர்ன-ல-வில்லேவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற கூட்டத்தின் ஒருபகுதியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
ஏற்கெனவே, ஜி7 கூட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க அமைச்சர் ரூபியோ நட்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து ரஷிய - உக்ரைன் போர், வளைகுடா போர் ஆகிய விவகாரங்களில் நட்பு நாடுகளின் ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இத்துடன், இந்தக் கூட்டத்தில் இத்தாலியின் துணைப் பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான அண்டோனியோ தஜானியை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.