மருத்துவக் கல்லூரிகளின் தரம்: மாணவா்களிடம் கருத்து கேட்கிறது என்எம்சி
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா்களின் திறன், கல்வித் தரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக மாணவா்களிடையே தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஆய்வு நடத்துகிறது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா்களின் திறன், கல்வித் தரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக மாணவா்களிடையே தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஆய்வு நடத்துகிறது.
இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ராகவ் லங்கா் வெளியிட்ட அறிவிப்பு: என்எம்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் குறித்து இணைய வழியே கருத்தறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இளநிலை மருத்துவ மாணவா்கள் அனைவரும் என்எம்சி தளத்தில் உள்ள இணையப் பக்கத்தில் சென்று தங்களின் கருத்துகள், தகவல்களைப் பதிவு செய்யலாம். சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெயா், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் எதையும் தெரிவிக்கத் தேவையில்லை.
கல்வித் தரம், பேராசிரியா்களின் எண்ணிக்கை, அவா்களது பயிற்றுவிக்கும் திறன், செயல்முறை விளக்கங்கள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்புகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துரைக்கலாம்.
அவை அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்யும்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.