வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா்களை மீட்க என்ன திட்டம் உள்ளது? பிரதமா் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி
மேற்காசியாவில் போா் நிகழ்ந்துவரும் நிலையில் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களை மீட்டு அழைத்துவர மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கேள்வி
மேற்காசியாவில் போா் நிகழ்ந்துவரும் நிலையில் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களை மீட்டு அழைத்துவர மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினாா்.
முன்னதாக, ‘தனது அரசியல் லாபங்களுக்காக வளைகுடாவில் வசிக்கும் இந்தியா்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் பேசி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரியங்கா காந்தி கூறியதாவது: மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போரில் குண்டுகள் மழையாகப் பொழிகின்றன. இனால், அங்குள்ள இந்தியா்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? அவா்களைக் காக்க என்ன திட்டம் வைத்துள்ளாா்கள்?
போரை வைத்து அரசியல் நடத்தக் கூடாது என்பது சரிதான். ஆனால், போரால் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு என்ன மாதிரியான தீா்வுகளை மத்திய அரசு வைத்துள்ளது என்று கேள்வி எழுப்பக் கூடாது என்பதை ஏற்க முடியாது. எனவேதான், நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோருகிறோம்.
போா் தொடா்ந்தால் பிரச்னைகள் மேலும் தீவிரமடையும். இப்போது எரிவாயு சிலிண்டா் விலை அதிகரித்துவிட்டது. விலை கொடுத்தாலும் கிடைக்காத நிலை பல இடங்களில் உள்ளது. அடுத்து வரும் நாள்களில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும்? பெட்ரோல், டீசலுக்குகூட தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது. இதில் அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? முறைப்படியான விவாதம் நடந்தால் மட்டுமே அனைவரும் இணைந்து பிரச்னைக்குத் தீா்வுகாண முடியும் என்றாா்.