வளைகுடா நாடுகளில் இருந்து 8.15 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்! - மத்திய அரசு அறிவிப்பு!
வளைகுடா நாடுகளில் இருந்து பிப். 28 முதல் 8.15 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளது குறித்து..
வளைகுடா போர் தொடங்கியது முதல் இதுவரை 8.15 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பி வந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதனால், வளைகுடா நாடுகளிடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இதையடுத்து, பல்வேறு நாடுகளும் தங்களின் வான்வழிப் பாதையை மூடியதால், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனிடையே, ஈரானில் சிக்கிய இந்தியர்கள் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா வழியாகவும், இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வழியாகத் தாயகம் திரும்பினர்.
Advertisement
இந்த நிலையில், வான்வழிப் பாதைகள் திறக்கப்பட்டுள்ள நாடுகளின் வழியாக இயக்கப்படும் விமானங்கள் மூலம் இந்தியர்கள் நாடு திரும்புவதாகவும், இதுவரை சுமார் 8,15,000 பேர் இந்தியா வந்துள்ளதாகவும் வியாழக்கிழமை (ஏப். 9) அன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரும் ஏப். 11 அன்று 2 நாள் அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்வதாகவும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.