முகப்பு
இந்தியா

கேரளத்தில் 1.39 கோடி பெண் வாக்காளர்கள்... ஆனால், களத்தில் வெறும் 40 பெண் வேட்பாளர்கள்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 40 பெண் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளதைப் பற்றி...

Updated On : 31 மார்ச், 2026 at 1:47 PM
தீவிர பிரசாரத்தில்... - - samakalika malayalam
பகிர்:

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 40 பெண் வேட்பாளர்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் வருகிற ஏப். 9 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், தீவிரப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பலரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் ஆளும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 12 பெண்களும், காங்கிரஸ் சார்பில் 9 பெண்களும், பாஜக சார்பில் 14 பெண்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 5 பெண்களும் உள்பட மொத்தமாக 40 பெண் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வரலாற்றில் முதல்முறையாக இரண்டு பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, கேரளத்தில் 1,39,21,868 பெண் வாக்காளர்களும், 1,32,20,811 ஆண் வாக்காளர்களும் உள்ளனர். ஆனால், ஆண் வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது பெண் வேட்பாளர்கள் மிகக் குறைந்தளவில் இருப்பது பல்வேறு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்காக 2023 ஆம் ஆண்டு நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்ற மசோதா கேரள சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பின்னர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதல் கிடைத்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இதுவும் பிணைக்கப்பட்டிருப்பதால், இந்த மசோதா இன்னும் அமலுக்கு வரவில்லை.

இருப்பினும், பல்வேறு கட்சிகள் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கும் என்று எதிர்நோக்கியிருந்த நிலையில், குறைவான பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 1957 ஆம் ஆண்டு கேரளத்துக்கான சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. அதன்பின்னர், இன்றைய நாள் வரையிலான தேர்தல்களில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான பெண் வேட்பாளர்களே தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏக்களாக தேர்வாகின்றனர்.

summary

The promise of expanding political space for women remains largely aspirational in Kerala’s upcoming Assembly elections, with just around 40 women candidates contesting in a state that has over 1.39 crore female voters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.