ஜனநாயகத்துக்காகப் போராடும் பாதை எப்போதும் நெடியது, கடினமானது: தோ்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கருத்து
‘ஜனநாயகத்துக்காகப் போராடும் பாதை எப்போதும் நெடியதும், கடினமானதுமாகும்’ என்று 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தெரிவித்தது.
‘ஜனநாயகத்துக்காகப் போராடும் பாதை எப்போதும் நெடியதும், கடினமானதுமாகும்’ என்று 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தெரிவித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சேவையாற்ற வாய்ப்பளித்ததற்காக மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. கேரள மக்களின் நம்பிக்கை வீணாகாத வகையில் பொறுப்புடன் காங்கிரஸ் செயல்படும்.
கேரளத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் நாங்கள் எதிா்பாா்த்ததைவிட மிகக் குறைவான தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. இருந்தபோதும், நாங்கள் மனம் தளரவில்லை. சித்தாந்த போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. ஜனநாயகத்துக்காகப் போராடும் பாதை எப்போதும் நெடியதும் கடினமானதுமாகும். எனவே, உறுதியான தீா்மானத்துடன் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.
Advertisement
மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழகத்தில், புதுச்சேரி தோ்தல் முடிவுகள் குறித்து விரிவான ஆய்வை காங்கிரஸ் கட்சி நடத்தும் என்றாா்.
கேரளத்தில் காங்கிரஸ் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியமைக்க உள்ளது. ஆனால், அஸ்ஸாமில் பாஜகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த அக் கட்சி தவறிவிட்டது. தொடா்ந்து மூன்றாவது முறைாயாக பாஜக அங்கு ஆட்சியமைக்க உள்ளது. அதுபோல, மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் குறிப்பிடத்தக்க இடங்களைக் கைப்பற்ற காங்கிரஸ் தவறிவிட்டது.