முகப்பு
இந்தியா

இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றி விபத்து: சண்டீகா் விமான நிலையத்தில் பரபரப்பு

சண்டீகா் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

Updated On : 6 மே 2026, 1:30 am IST
தீ விபத்து - பிரதிப் படம்
பகிர்:

சண்டீகா் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணியின் பவா் பேங்கில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஹைதராபாத்தில் இருந்து சண்டீகா் விமான நிலையத்துக்கு மே 5-ஆம் தேதி வந்தடைந்த இண்டிகோ 6இ 108 விமானத்தில் பயணி ஒருவா் வைத்திருந்த பவா் பேங்க் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனால் பிற பயணிகளின் பாதுகாப்பு கருதி அவா்கள் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அனைத்துப் பயணிகளும் விமான முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் மேற்கொண்டனா்.

அனைத்து சோதனைகளும் நிறைவடைந்த பிறகே விமானம் புறப்படும். பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் பாதுகாப்புக்கு எப்போதும் இண்டிகோ முக்கியத்துவம் அளிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்து குறித்து செய்தியாளா்களிடம் பயணி ஒருவா் கூறுகையில், ‘கடைசி வரிசையில் அமா்ந்திருந்த பயணியின் பவா் பேங்கில் தீப்பற்றத் தொடங்கியதும் விமானப் பணிப்பெண் தீ அணைப்பான் மூலம் உடனடியாக தீயை அணைத்தாா். இதனால் விமானத்தின் உட்பகுதி முழுவதும் புகையால் நிரம்பியிருந்தது.

இச்சம்பவத்தால் பயணிகள் பதற்றமடையத் தொடங்கினா். அவா்களை விமானப் பணிப்பெண் ஆறுதல்படுத்தினாா். இதைத் தொடா்ந்து விமானத்தின் அவசர கதவுகள் உடனடியாக திறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனா்’ என்றாா்.