ஐபிஎல் இறுதிப்போட்டி சின்னசாமி திடலில் கிடையாது! ஏன்?
சின்னசாமி திடலிலிருந்து ஐபிஎஸ் இறுதிப்போட்டி மாற்றப்பட்டது குறித்து...
சின்னசாமி திடலிலிருந்து அகமதாபாத் திடலுக்கு ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றப்பட்டதற்கு வணிகரீதியான காரணம் என்று கர்நாடக மாநில அமைச்சர் ஜி. பரமேஸ்வரா கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, கர்நாடக மாநிலத்தின் சின்னசாமி திடலில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இறுதிப்போட்டியை சின்னசாமி திடலிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் திடலுக்கு மாற்றுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதனிடையே, கர்நாடகத்தின் சின்னசாமி நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளில் ஆளுங்கட்சியினருக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என காங்கிரஸார் வலியுறுத்தியதால்தான், போட்டியை அகமதாபாத் திடலுக்கு மாற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
Advertisement
இந்த நிலையில், அகமதாபாத் திடலுக்கு இறுதிப்போட்டி மாற்றப்பட்டது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா பேசியதாவது, இங்கு 5 போட்டிகள் நடந்துள்ளன. நடத்தப்பட்ட போட்டிகளில் பாதுகாப்பு குறித்தோ ஏற்பாடுகள் குறித்தோ ஒரு புகார்கூட வரவில்லை. பிசிசிஐ-க்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை.
எங்களுக்கு கிடைத்த அதிகாரபூர்வமற்ற தகவலின்படி, சின்னசாமி திடலில் சுமார் 33,000 இருக்கைகள் உள்ளன. அவற்றில் முக்கிய பிரமுகர்கள், விளம்பரதாரர்கள், கிரிக்கெட் வீரர்கள் என 7,000 முதல் 8,000 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதம் 25,000 இருக்கைகள் மட்டுமே இருக்கும்.
ஆனால், வணிகரீதியாக பார்க்கும்போது இது சாத்தியமில்லை என்பதால், ஒரு லட்சம் இருக்கைகள் கொண்ட அகமதாபாத் திடலுக்கு போட்டியை மாற்ற அவர்கள் முடிவு செய்திருக்கலாம். ஐபிஎல் மரபுகளின்படி, முதல் மற்றும் இறுதிப்போட்டிகள் நடப்பு சாம்பியனின் சொந்த மண்ணில்தான் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கு பிசிசிஐ விதிவிலக்கு அளித்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் டிக்கெட் கோரியதால்தான் போட்டியை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக எழுப்பிய கேள்விக்கு, இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எத்தனை டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன? வெறும் 4 டிக்கெட்டுகளால் என்ன வித்தியாசம் ஏற்பட்டுவிடும்? என்று ஜி. பரமேஸ்வரா தெரிவித்தார்.