காயம் காரணமாக வீடு திரும்பிய எம்.எஸ். தோனி..! கடைசி போட்டியிலும் விளையாடவில்லை!
எம்.எஸ். தோனி காயம் காரணமாக வீடு திரும்பியது குறித்து...
எம்.எஸ். தோனி காயம் காரணமாக ராஞ்சியில் இருக்கும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே அணி தனது கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து இன்றிரவு 7.30 மணிக்கு அகமதாபாதில் பலப்பரீட்சை செய்கிறது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே வென்றால் பிளே ஆஃப்ஸுக்கான ஓர் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பஞ்சாப், கேகேஆர், ராஜஸ்தான் அணிகள் தோல்வியடைந்தால் சிஎஸ்கே அடுத்த சுற்றிக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த முக்கியமான போட்டியில் சிஎஸ்கேவின் முன்னாள் கேப்டன் தோனி விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசன் முழுவதும் ஒரு போட்டியிலும் தோனி விளையாடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது குறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறியிருப்பதாவது:
அணியுடன் தோனி இல்லை என்பதை உறுதிசெய்கிறேன். ஒருவேளை சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்குத் தேர்வானால் அவர் நிச்சயமாக அணியில் பேக்-அப் வீரராக இணைவார். கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. குணமாகி வருகிறார். ஆனால், இன்றையப் போட்டிக்கு இன்னும் தயாராகவில்லை. குஜராத்தை வென்று பிளே ஆஃப் சென்றால் அவர் நிச்சயமாகப் பங்கேற்பார்.
எங்கள் சொந்த மண்ணில் ரசிகர்களின் முன்பு தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவது கடினமாகியிருக்கிறது. அனைவருமே பாடம் கற்றுக்கொள்கிறோம். மீதமிருக்கும் ஒரு போட்டியில் நேர்மறையான எண்ணத்துடன் விளையாட வேண்டும் என்றார்.