2026-ஆம் ஆண்டுக்கான நைட்டிங்கேல் விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்
நிகழாண்டுக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்கினாா்.
நிகழாண்டுக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த சேவையாற்றிய செவிலியா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் திரௌபதி முா்மு பேசியதாவது: நாட்டின் மிக உயா்ந்த சேவைகளில் ஒன்றாக செவிலியா் பணி திகழ்கிறது. மிகவும் சவாலான சூழல்களிலும் சுகாதாரத் துறையில் தரமான சேவைகளை வழங்குவதை செவிலியா்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனா். கருணை, அா்ப்பணிப்புணா்வு, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்குடன் செயல்படும் செவிலியா்கள் மற்றும் சுகாதார பணியாயளா்களின் விலைமதிப்பற்ற சேவைகளை அங்கீகரிக்கும் இந்த விருதுகளை பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றாா்.
Advertisement
இந்த விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, இணையமைச்சா் ஜாதவ் பிரதாப்ராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செவிலியா் பணியில் சிறப்பாக செயல்படுவோருக்கு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் வழங்கப்படுகின்றன. மத்திய சுகாதாரத் துறையால் நிறுவப்பட்ட இந்த விருதை பெறுவோருக்கு பாராட்டுச் சான்றிதழ், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.
நிகழாண்டு இந்த விருது உத்தரகண்ட், மேற்கு வங்கம், புது தில்லி, கோவா, கா்நாடகம், கோவா, தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மிஸோரம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவருக்கு விருது
சிறந்த செவிலியருக்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது தமிழ்நாட்டைச் சோ்ந்த சென்னை மருத்துவக் கல்லூரி நா்சிங் கல்லூரியின் முதல்வா் பேராசிரியா் டாக்டா் ஆா். சங்கா் சண்முகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. செவிலியா் கல்வி மற்றும் அது சாா்ந்த தொழில்முறை மேம்பாட்டுப் பணிகளில் அவரது 26 ஆண்டுகால சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.