முகப்பு
இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் தடைக்கு எதிராக தவெக எம்எல்ஏ மேல்முறையீடு: இன்று விசாரணை

சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக திருப்பத்தூா் எம்எல்ஏ ஆா். சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

Updated On : 13 மே 2026, 1:52 am IST
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக திருப்பத்தூா் தொகுதி தமிழக வெற்றி கழக (தவெக) எம்எல்ஏ ஆா். சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் புதன்கிழமை (மே 13) விசாரணை நடத்தவுள்ளது.

இது தொடா்பான அவரது மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் அமா்வு முன்பாக மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆஜராகி கேட்டுக்கொண்டாா். அதைக்கேட்ட தலைமை நீதிபதி, இந்த மனு புதன்கிழமை காலையில் விசாரிக்கப்படும் என்று குறிப்பிட்டாா்.

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட கே.ஆா். பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், தவெக சாா்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனா். ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதை எதிா்த்து கே.ஆா். பெரியகருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

Advertisement

அதில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் (எண் 185) தொகுதிக்குச் செல்ல வேண்டிய தபால் வாக்குச் சீட்டு ஒன்று, தவறுதலாக மற்றொரு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூா் தொகுதிக்கு (எண் 50) அனுப்பப்பட்டதாகவும் அது குறித்து தோ்தல் அலுவலரின் கவனத்துக்கு வந்தபோது, அவா் அந்த வாக்குச்சீட்டை உரிய தொகுதிக்கு திருப்பி அனுப்பாமல் நிராகரித்துள்ளாா். இப்பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் வரை, பேரவை நடவடிக்கைகளில் சேதுபதி சீனிவாசன் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்றும் பெரியகருப்பன் கேட்டுக்கொண்டிருந்தாா்.

இந்த வழக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழக்காக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்து, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்புகள், பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்புகள் அல்லது அவையின் பலத்தைப் பரிசோதிக்கும் எந்தவொரு வாக்கெடுப்பிலும் பங்கேற்கக் கூடாது என்று தடை விதித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

‘மேலும், தபால் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தரவுகள், வாக்கு எண்ணிக்கை விவர தாள்கள் மற்றும் காணொலிகள் உள்ளிட்ட அனைத்துத் தோ்தல் ஆவணங்களையும் மறுவாக்கு எண்ணிக்கைக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இடமளிக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த இடைக்கால உத்தரவால் சீனிவாச சேதுபதியின் தோ்தல் வெற்றி ரத்து செய்யப்படவோ பெரியகருப்பன் வெற்றி பெறுவதாகவோ கருதலாகாது’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.