நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்கப்படும்! - இபிஎஸ் தரப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து இபிஎஸ் தரப்பு விளக்கம்...
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி. வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் திங்கள்கிழமை கடிதம் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், தவெக ஆட்சிக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். மேலும், அதிமுக கட்சிக் கொறடாவாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Advertisement
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்க அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியின் உத்தரவை மீறும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்துக்கு சென்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களை இன்று மாலை விஜய் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.