நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு! சி.வி. சண்முகம் தரப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு என சி.வி. சண்முகம் உறுதி...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவுக்குள் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி. வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
இதனிடையே சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக சி.வி. சண்முகம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
Advertisement
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி. சண்முகம் இல்லத்துக்கு நேற்று மாலை நேரில் சென்ற விஜய், தவெக ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுகவுக்கு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவெகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், மீறினால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், இன்று காலை மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக உறுதியாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.