பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டி
பழனி பத்திரப்பதிவு விவகாரம் குறித்து பெ. சண்முகம் பேட்டி...
பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி விவகாரத்தில் அமைச்சருக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கா் நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பெ. சண்முகம், பழனி விவகாரம் குறித்து பேசியதாவது:
Advertisement
Advertisement
”பழனி கோயில் நில விவகாரத்தில் மிகப்பெரிய பத்திர மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில், மேலிருந்து கீழ்மட்ட வரையிலான பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதுவரை கிடைத்திருக்கும் தகவலில் இருந்து பத்திரப்பதிவு துறை, செல்வாக்குமிக்க நபர்கள் என பலர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பிரமுகராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் நீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடியில் ஒன்றாக உள்ளது. சிபிசிஐடி முறையாக நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்.
தவெகவுக்கும் அமைச்சர்களுக்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதுபோன்ற எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
மாறாக, பத்திரப்பதிவுத் துறை நீதிமன்றத்தை ஏமாற்றி, தங்களுக்கு வேண்டியவரை அந்த இடத்தில் ஒரு நாளுக்காக அமரவைத்து செய்துள்ளனர். அதிகாரிகள் மத்தியில் கூட்டு மோசடி நடைபெற்றுள்ளது.
இதுவரை வந்த தகவலின்படி இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கு இதில் தொடர்பில்லை என்றே தெரிகிறது. அவரே நேரடியாக சென்று முன்னின்று இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.” எனத் தெரிவித்தார்.
Palani land registration! I do not agree that there is a link to the TVK government! – P. Shanmugam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.