தவெகவில் இணைகிறாரா சி. விஜயபாஸ்கர்?
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தவெகவில் இணையவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பற்றி...
புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த முன்னாள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கரும் தமிழக வெற்றிக் கழகம் செல்ல இருப்பதாக பரபரப்பு சூழ்ந்துள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பேரவைக்குள் நடந்த பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.
இதில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து விலகி நின்ற, அந்த 25 பேரின் கொறடாவாகத் தேர்வு செய்யப்பட்டவர் விராலிமலை சி. விஜயபாஸ்கர்.
Advertisement
Advertisement
அதிமுக ஆட்சிக் காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர். அதன்பிறகு 2021 தேர்தலிலும், தற்போது நடந்து முடிந்த 2026 தேர்தலிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வென்ற ஒரேயொரு அதிமுக உறுப்பினர்.
அதிமுக ஆட்சியமைந்திருந்தாலும், தவெகவுக்கு ஆதரவளித்த சூழலிலும், மீண்டும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியிருந்தது.
இந்த நிலையில் அதிமுக உறுப்பினர்களில் எதிர்பார்க்கப்பட்டவர்களில் இருந்து அமைச்சரவைப் பங்கீடு இல்லாமலேயே விரிவாக்கம் நடந்து முடிந்த பிறகு, பெரும்பான்மையானவர்கள் மீண்டும் அதிமுகவில் சங்கமிப்பதும், 4 பேர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைவதும் நடந்தது.
அதேநேரத்தில், சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்திக்கவில்லை என்ற பேச்சும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில் இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கரின் இல்லத்துக்கு வியாழக்கிழமை காலை அதிமுக நிர்வாகிகள் கூடத் தொடங்கினர். நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டு அவர் தவெகவுக்கு இடம்பெயர்கிறார் என்ற தகவலும் உச்சகட்டத்தை எட்டியது.
விராலிமலையைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலர்கள் பழனியாண்டி (மேற்கு), நாகராஜ் (தெற்கு), ராஜேந்திரன் (வடக்கு) உள்ளி்ட்டோருடன் மாவட்டம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் வந்திருந்தனர்.
அதிமுகவில் தொடர்வதா, தவெகவுக்கு இடம்பெயர்வதா என விஜயபாஸ்கர் அவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அதன்பிறகு வெளியே வந்த விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் பேசுகையில், "62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த மக்களின் கருத்துகளையும், எனது வெற்றிக்காக உழைத்த அதிமுக நிர்வாகிகளின் கருத்தையும் கேட்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு எனது முடிவைச் சொல்வேன்" என்று மட்டும் தெரிவித்துச் சென்றார்.
மற்றொரு செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியது:
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ஏராளமான கட்சியினர் வந்து கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். இன்று மாலையும் தொடர்ந்து தொண்டர்களைச் சந்திக்கிறேன். நாளை காலையும் சந்திக்கிறேன். சுமார் 50 திருமணப் பத்திரிகைகள் வந்துள்ளன. எனவே, நாளையும் புதுக்கோட்டையில்தான் இருக்கிறேன். மக்களின் கருத்துகளுக்கேற்ப என் முடிவு இருக்கும். அவசரமில்லை என்றார்.
மேலும் என்னுடைய தொகுதி மக்கள் முடிவே என்னுடைய முடிவு என்றும் கூறினார்.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தவெகவில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Is ADMK Ex minister C. Vijayabaskar joining the TVK?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.