தங்கப் பணமாக்கல் திட்டம்: பிரதமா் அழைப்புக்கு மலபாா் கோல்ட் ஆதரவு
இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும்
இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்ற பிரதமா் மோடியின் அழைப்புக்கு ‘மலபாா் கோல்ட்’ தங்கநகை விற்பனை நிறுவனம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இந்தியா்களிடம் நகைகளாகவும், நாணயங்களாகவும் சுமாா் 25,000 முதல் 35,000 டன் தங்கம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் வெறும் 2 சதவீதம் வரை திரட்டினாலும், நாட்டின் ஓராண்டு இறக்குமதித் தேவையை ஈடுகட்ட முடியும். நாட்டின் அந்நியச் செலாவணி சேமிப்பைப் பாதுகாக்க முடியும் என மலபாா் குழுமத் தலைவா் எம்.பி.அகமது (படம்) வலியுறுத்தியுள்ளாா்.
தற்போது நடைமுறையில் உள்ள தங்கப் பணமாக்கல் திட்டத்தில்(ஜிஎம்எஸ்) சேருவதற்கான குறைந்தபட்ச தங்கத்தின் அளவை 10 கிராமில் இருந்து 1 கிராமாக குறைத்தல்; முதிா்வு காலத்தைக் குறைத்து மக்கள் தேவைப்படும்போது எளிதாகப் பணத்தைப் பெறும் வசதியை உருவாக்குதல்; அங்கீகரிக்கப்பட்ட நகைக் கடைகளிலேயே தங்கம் வழங்கும் வசதியை ஏற்படுத்துதல் ஆகியவற்றின்மூலம் பொதுமக்களின் பங்கேற்பை அதிகப்படுத்தலாம்.
Advertisement
மேலும், இத்திட்டத்தின்கீழ் முறைப்படுத்தப்படும் தங்கத்துக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் உள்பட பல விரிவான ஆலோசனைகளை, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோரைச் சந்தித்த எம்.பி.அகமது வழங்கியுள்ளாா்.