கோயில்களின் தங்கத்தை பெற்று தங்கப்பத்திரமாக மாற்றும் திட்டம்? மத்திய அரசு விளக்கம்!
கோயில்களின் தங்கத்தை பத்திரமாக மாற்றும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதைப் பற்றி...
கோயில்களில் உள்ள தங்க நகைகள், தங்க ஆபரணங்களைப் பெற்றுக் கொண்டு தங்கப் பத்திரம் வெளியிட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றம் காரணமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நிய செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, ஓராண்டுக்கு தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த மே 13 ஆம் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதனால், அன்றைய தினமே தங்கத்தில் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 8,000-க்கு மேல் உயர்ந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இருக்கும் தங்க நகைகள், கோயில் கோபுரங்கள், கதவுகள் ஆகியவற்றில் இருக்கும் தங்கத்தை, தங்கப்பத்திரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விவகாரம் மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்த நிலையில், இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.
அந்த அறிக்கையில், “கோயில்களில் உள்ள தங்க இருப்புகளுக்கு மாற்றாக தங்கப் பத்திரங்களை வெளியிடுவது அல்லது கோயில் தங்க இருப்புகளை பணமாக்குவதற்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிப்பது போன்றவற்றுக்காக மத்திய அரசு திட்டமிடுகிறது என்று சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை.
நாடு முழுவதும் உள்ள கோயில் அறக்கட்டளைகள் அல்லது மத அமைப்புகளின் பொறுப்பில் உள்ள தங்கத்தை பணமாக்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிடுகிறது என்பது எந்த அடிப்படையும் இல்லாத முற்றிலும் தவறான வதந்தியாகும்.
கோயில் கோபுரங்கள், கதவுகள் அல்லது இதர கோயில் அமைப்புகளின் மீதுள்ள தங்கத்தகடுகளை இந்தியாவின் தங்க இருப்புகளாக கருதுவதாக பரவும் செய்திகளும் முற்றிலும் அடிப்படையற்ற தவறான தகவல்.
மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தெளிவுப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது மக்களிடையே தேவையற்ற குழப்பதை ஏற்படுத்தும்.
எனவே அனைத்து குடிமக்களும் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் மூலம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு அரசு வலியுறுத்துகிறது.
கொள்கை முடிவுகள் அல்லது அரசுத்திட்டங்கள் தொடர்பான எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்திகள், அரசு இணையதளங்கள் மற்றும் பொது தகவல் தளங்கள் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.