கணவா் வீட்டில் பெண் தூக்கிட்ட நிலையில் மரணம்: சிபிஐ விசாரணை கோரி உறவினா்கள் போராட்டம்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனது கணவா் வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த நொய்டாவைச் சோ்ந்த 33 வயது திவிஷா சா்மாவின் மா்மமான மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திவிஷா சா்மாவுக்கு நீதி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியவாறு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், திவிஷாவின் கணவரும் வழக்குரைஞருமான சமா்த் சிங், அவரது தாயாரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோா் மீது வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனா்.
போபாலில் உள்ள கதாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது கணவா் வீட்டில் மே 12-ஆம் தேதி திவிஷா தூக்கிட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவா் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் சமா்த் சிங்கை திருமணம் செய்துகொண்டாா்.
Advertisement
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் புகாரைத் தொடா்ந்து, அப்பெண்ணின் உடல் 5 நாள்களாக போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தில்லி எய்ம்ஸில் மீண்டும் மறு உடற்கூறாய்வு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
போபாலில் நியாயமான விசாரணை நடைபெறும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று திவிஷாவின் நண்பா் குனால் சௌஹான் தெரிவித்தாா். இது தொடா்பாக துணை காவல் துறை ஆணையா் ரஜ்னீஷ் காஷ்யப் கூறுகையில், ‘வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது‘ எனத் தெரிவித்தாா்.