முகப்பு
இந்தியா

சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு

சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்...

Updated On : 25 மே 2026, 3:35 am IST
மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி - IANS
பகிர்:

சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மாவட்டந்தோறும் மையங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா்களுக்கு மேற்கு வங்க மாநில அரசு உத்தரவிட்டது.

சட்டவிரோத குடியேறிகளை அவா்களது தாய்நாட்டுக்கு அனுப்பும் வரை தற்காலிகமாக இந்த மையங்களில் தங்கவைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் வென்று ஆட்சியமைத்தால் சட்டவிரோத குடியேறிகளை மாநிலத்தில் இருந்து வெளியேற்றுவோம் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியமைத்த சில நாள்களில் இதைச் செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக மேற்கு வங்க உள்துறை மற்றும் வன விவகாரங்கள் துறையின் வெளிநாட்டினா் பிரிவு மே 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் எனக் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்ட வெளிநாட்டினா் மற்றும் சிறையில் இருந்து விடுதலையான வெளிநாட்டினரை அடைத்து வைக்க மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சியா்கள் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அவா்களை தாய்நாட்டுக்கு அனுப்பும் வரை தற்காலிகமாக இந்த மையங்களில் தங்க வைக்க வேண்டும்.

ரோஹிங்கயாக்கள் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக கடந்த ஆண்டு மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதன் நகல்கள் மாநில காவல் துறை தலைமை இயக்குநா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆணையா்கள் மற்றும் வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்னா் வங்கதேச-மேற்கு வங்க எல்லையில் வேலிகள் அமைப்பதற்கான நிலங்களை ஒதுக்கிய நிகழ்வில் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளை சந்தித்து சுவேந்து அதிகாரி ஆலோசனை நடத்தினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் குடிமக்களாக அங்கீகரிக்கப்படாதவா்களைக் கைது செய்து உடனடியாக எல்லை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவா்கள் வங்கதேச எல்லை படையினரிடம் சம்பந்தப்பட்ட நபா்களை ஒப்படைத்து மேற்கு நாடுகடத்தும் பணிகளை மேற்கொள்வாா்கள்’ என்றாா்.