விடைத்தாள் மதிப்பீடு இணையதள யூஆர்எல் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ
விடைத்தாள் மதிப்பீடு இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது குறித்து...
விடைத்தாள் மதிப்பீடு இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு அந்த யூஆர்எல் வேறு என்றும், உண்மையான யூஆர்எல் ஹேக் செய்யப்படவில்லை எனவும் சிபிஎஸ்இ செவ்வாய்க்கிழமை (மே 26) விளக்கம் அளித்துள்ளது.
12 ஆம் வகுப்பு படித்த மாணவர், பொழுதுபோக்குக்காக சிபிஎஸ்இ தளத்தை முடக்க முயன்றதாகவும், அப்போது அதில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததாகவும் அதனை சிஇஆர்டி-க்கு மின்னஞ்சலில் அனுப்பியதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகின்றது.
இது குறித்து சிபிஎஸ்இ, தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
சமூக ஊடகத்தில் ஒரு பயனர் வெளியிட்ட பதிவில், http://cbse.onmarks.co.in என்ற இணையதள முகவரியைக் கொண்ட சிபிஎஸ்இ திரைவழி மதிப்பிடல் (OSM) தளத்தை கடந்த பிப்.26 அன்று ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சில செய்தி மற்றும் கட்டுரைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தப்படுவது என்னவென்றால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப்பட்ட இணையதளம் வேறு ஒரு URL-ஐக் கொண்டிருந்தது. அந்த URL ஹேக் செய்யப்படவோ அல்லது குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளையோ கொண்டிருக்கவில்லை. http://cbse.onmark.co.in என்ற URL சோதனை மற்றும் மறுஆய்வு நோக்கங்களுக்காக மாதிரித் தரவுகளைக் கொண்ட ஒரு சோதனைத் தளம் மட்டுமே.
அந்த இணையதளத்தில் உண்மையான மதிப்பீட்டுத் தரவுகள், மதிப்பெண்கள் அல்லது பிற தரவுகள் எதுவும் இல்லை. உண்மையான மதிப்பீட்டுப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட இணையதளத்தில் எந்தப் பாதுகாப்பு மீறல்களும் வெளிவரவில்லை என்பதை சிபிஎஸ்இ வலியுறுத்துகிறது.
மேலும், உண்மையில் பயன்படுத்தப்படும் இந்தத் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிபிஎஸ்இ உறுதியளிக்கிறது எனத் தெரிவித்தது.