ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ! பெற்றோர் கவலை
ஆம் வேதாந்த் என்ற +2 மாணவரின் இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது என ஒப்புக்கொண்டது சிபிஎஸ்இ.
பயங்கர குளறுபடிகளுக்கு இடையே விடைத்தாள் கோரி விண்ணப்பித்திருந்த +2 மாணவர் வேதாந்த் ஸ்ரீவத்ஸவாவுக்கு அளிக்கப்பட்டது தவறான இயற்பியல் விடைத்தாள்தான் என்று சிபிஎஸ்இ ஒப்புக் கொண்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் இரண்டு பேருக்கு விடைத்தாள்கள் மாறிவிட்டன. அவர்களது மதிப்பெண்கள் விரைவில் சரி செய்யப்படும் என்றும் சிபிஎஸ்இ கூறியிருக்கிறது.
மறுமதிப்பீடு பணியின்போது மாணவர்களின் இயற்பியல் விடைத்தாள்களில் குளறுபடி நேர்ந்துவிட்டது என்று மிகவும் சாதாரணமாக ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறது.
Advertisement
Advertisement
வேதாந்த் ஸ்ரீவத்சவா என்ற மாணவர், மறுமதிப்பீடு கோரி விடைத்தாளை கேட்டிருந்த போது, அவருக்கு வழங்கப்பட்ட இயற்பியல் விடைத்தாள் அவருடையதே அல்ல என்று குற்றம்சாட்டியிருந்தார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக அவர் ஏதோ எதிரி நாட்டைச் சேர்ந்தவர் போல சிலர், அவருக்கு வன்மையானக் கண்டனக் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.
வேதாந்த் கூறியிருந்ததாவது, இயற்பியல் வினாத்தாளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அது என்னுடையதே அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேநேரத்தில், மற்றொரு மாணவர் தன்னுடைய வேதியியல் விடைத்தாளும் மாறியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால், ஓஎஸ்எம் எனப்படும் கணினி வழியில் விடைத்தாள் திருத்தும் பணி மீதே மாணவர்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
மாணவர் வேதாந்துக்கு சிபிஎஸ்இ இணைய செயலாளர் அனுப்பியிருக்கும் பதிலில், உங்களுடைய சரியான இயற்பியல் விடைத்தாளை இணைத்திருக்கிறோம். உங்கள் மதிப்பெண்கள் மறுப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து, விடைத்தாளை ஆய்வு செய்து மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பது குறித்து வேதாந்த் ஆலோசித்து வருகிறார்.
இதுபோன்று எத்தனை மாணவர்களுக்கு குழப்பங்கள் நேரிட்டிருக்கும், எத்தனை பேருக்கு தெரியவராமல் இருந்திருக்கும் என்பது குறித்தும் பெற்றோர் கவலை தெரிவித்து வருகிறார்கள். பல மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் தொழில்நுட்பத்தைக் காரணம் காட்டி மத்திய அரசு தப்பித்துக்கொள்ளும். மாணவர்கள் எப்படி தப்புவது?