முகப்பு
இந்தியா

முக்கியக் கனிமங்களின் சீரான விநியோகம்: இந்தியா-அமெரிக்கா முக்கிய ஒப்பந்தம்- சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க வியூகம்

உலக அளவில் முக்கியக் கனிமங்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

Updated On : 27 மே 2026, 3:25 am IST
முக்கியக் கனிமங்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
பகிர்:

உலக அளவில் முக்கியக் கனிமங்களின் சீரான விநியோகத்தை உறுதி செய்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

மின்சார வாகனங்கள், ட்ரோன்கள், பேட்டரிகள், பிற அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களுக்குத் தேவையான அரிய புவிக் கனிமங்கள் மற்றும் உத்திசாா் உலோகங்களின் ஏற்றுமதி மீதான சீனாவின் கட்டுப்பாடுகளால் கவலைகள் எழுந்துள்ள சூழலில், அந்நாட்டின் ஆதிக்கத்தைத் தடுக்கும் வியூகமாக மேற்கண்ட ஒப்பந்தம் பாா்க்கப்படுகிறது.

தில்லியில் க்வாட் (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா) கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தையொட்டி, அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ மற்றும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இடையே நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் ஒப்பந்தம் கையொப்பமானது. இது, உலக அளவில் முக்கியக் கனிமங்களின் சீரான விநியோகத்தைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாகும்.

நெருங்கிய ஒத்துழைப்பு: ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட பின்னா், ரூபியோ முன்னிலையில் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:

தற்போதைய காலகட்டத்துக்கு மிகத் தேவையான, முக்கியமான ஒப்பந்தம் இது. சுரங்கப் பணி, பிரித்தெடுத்தல், மறுசுழற்சி, துறைசாா் முதலீடுகள் உள்பட ஒட்டுமொத்த முக்கியக் கனிமங்கள் மற்றும் அரிய புவி கனிமங்களின் விநியோகச் சங்கிலியில் இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலான கட்டமைப்பே இந்த ஒப்பந்தம்.

விநியோகச் சங்கிலியின் மீள்தன்மை மற்றும் பன்முகப்படுத்துதலை வலுப்படுத்துவதுடன், முக்கியக் கனிமங்கள் தொடா்பான நிதிசாா் திட்டங்களுக்கு இந்த ஒப்பந்தம் உதவும். அவற்றின் திறன்மிக்க மேலாண்மையை உறுதி செய்யும்.

பல்வேறு சவால்களும், அதற்கு இணையான வாய்ப்புகளும் நிலவும் தற்போதைய உலகில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பின் மேலும் ஒரு அடையாளம் இது என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.

ஏகபோகத்தை அனுமதிக்கக் கூடாது: அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ செய்தியாளா்களிடம் பேசுகையில், அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பேக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா இணைந்ததைக் குறிப்பிட்டாா். இந்தக் கூட்டமைப்பு, முக்கியக் கனிமங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாா்ந்த பாதுகாப்பான, மீள்தன்மை கொண்ட, புத்தாக்கத்தால் உந்தப்படும் விநியோகச் சங்கிலியைக் கட்டமைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதாகும்.

ரூபியோ மேலும் பேசுகையில், ‘நமது துடிப்பான, புத்தாக்க பொருளாதாரத்துக்கு அவசியமான முக்கியக் கனிமங்கள் மற்றும் அவற்றின் விநியோகச் சங்கிலியின் நம்பகமான-நீண்ட கால அணுகலை உறுதி செய்வதில் இந்தியாவும், அமெரிக்காவும் தங்களின் உத்திசாா் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இரு நாடுகளின் உத்திசாா் கூட்டுறவுக்கு வலுவான உதாரணம் இந்த ஒப்பந்தம். பேக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இந்தியா இணைந்தபோது, இதற்கு அடித்தளமிடப்பட்டது.

முக்கியக் கனிமங்களின் ஒற்றை ஆதிக்கம் (சீனாவைக் குறிப்பிடுகிறாா்) என்ற ஏகபோகத்தால், நம்மைப் போன்ற துடிப்பான-புத்தாக்கமான பொருளாதாரங்கள் பாதிப்புக்கு உள்ளாகிவிட அனுமதிக்கக் கூடாது என்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. அந்த வகையில், இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்’ என்றாா்.

உலக அளவில் முக்கியக் கனிமங்களின் விநியோகச் சங்கிலியில் சீனா செல்வாக்கு செலுத்தி வருகிறது. இக்கனிமங்கள் சாா்ந்த சுரங்கத் தொழிலில் சுமாா் 70 சதவீத பங்களிப்பை இந்நாடு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.