முகப்பு
திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்

அதிகாரம் - 9. விருந்தோம்பல்

விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஒருபோதும் ஆட்படமாட்டார். வேள்வியைவிட சிறந்த விருந்தோம்பலே மேன்மையானது. 

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:31 PM
பகிர்:


அதிகார விளக்கம்

விவசாயத்தை தொழிலாகக் கொண்டதால் விருந்து என்பது தோன்றியது. உயிர் காக்கும் மருந்தாக இருப்பினும், அதை விருந்துடன் பகிர்ந்துகொள்வதே சிறப்பானது. விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஒருபோதும் ஆட்படமாட்டார். வேள்வியைவிட சிறந்த விருந்தோம்பலே மேன்மையானது. 

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

Advertisement

இருப்பதை வைத்து இல்வாழ்க்கை வாழ்வது, விருந்து கொடுப்பது போன்றவை விவசாயம் செய்பவர்களின் பொருட்டே வந்தவை.

82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

சாகா மருந்தாக இருப்பினும், விருந்தினர் இருக்க தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கதல்ல.

83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து பாழ்படுதல் இன்று. 

ஒவ்வொரு காலையும் விருந்தினரை எதிர்பார்ப்பவரின் வாழ்க்கை, பருவகால மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை.

84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். 

முகமலர்ச்சியுடன் விருந்தினரைக் கவனிப்பவர்களை, உள்ளுக்குள் இருந்து செயல்படா விடாமல் தடுக்கும் சோம்பல் ஒருபோதும் அணுகாது.

85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தினர்க்கு விருந்து படைத்து, மீதம் இருப்பதை மகிழ்வுடன் உண்பவர், தன் நிலத்தில் விதைக்கத் தேவையே ஏற்படாமல், அந்நிலம் தானாகவே விளையும்.

86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

விருந்தினரை உபசரித்து, அடுத்து வரும் விருத்தினருக்காகக் காத்திருப்பவரை தெய்வீகமானவர்களும் ஆசீர்வதிப்பார்கள்.

87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தினரை உபசரிப்பவருக்கு அந்த விருந்தோம்பலே வேள்விப் பயன்போல் துணையாக இருக்கும். வேறு துணையே தேவையில்லை.

88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

விருந்தினரை உபசரித்து அதன் பயனை அடைய விரும்பாதவர்கள், நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று பின்னர் வருந்துவார்கள்.

89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

விருந்தினரை உபசரிப்பதைப்போல் வேறு பேறு எதுவும் இல்லை. சிறுபுத்தி உள்ளவர்களிடம்தான் விருந்தினரை உபசரிக்கக் கூடாது என்ற மடமை இருக்கும்.

90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

முகர்ந்தாலே வாடிவிடும் அனிச்ச மலர்போல், இன்முகம் காட்டி உபசரிக்காத விருந்து வீணாகிவிடும்.

இந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள - சிவயோகி சிவகுமார் (9444190205)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments