முகப்பு
கிரிக்கெட்

சிஎஸ்கேவுக்கு கவலையளிக்கும் விஷயம் இது மட்டும்தான்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு விஷயம் மட்டுமே இந்த சீசன் முழுவதும் கவலையளிப்பதாக இருக்கப் போவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

Updated On : 4 ஏப்ரல் 2026, 6:21 pm IST
சிஎஸ்கே வீரர்கள் - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)
பகிர்:

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஒரு விஷயம் மட்டுமே இந்த சீசன் முழுவதும் கவலையளிப்பதாக இருக்கப் போவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 3) சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு அந்த அணிக்கு கவலையளிக்கும் விஷயமாக இருப்பதாகவும், அதனை விரைவில் சரிசெய்வது அவசியம் எனவும் அந்த அணி நிர்வாகத்துக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

சுனில் கவாஸ்கர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் பந்துவீச்சு மிகவும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் அவர்களின் பந்துவீச்சே அவர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கப் போகிறது. பந்துவீச்சில் வலுவாக இல்லாததால், சிஎஸ்கே அணியின் பேட்டர்கள் ஒவ்வொரு போட்டியிலும் 225 அல்லது 230 ரன்கள் எடுக்க வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் அணியைப் போன்று அனைத்து அணிகளும் ஆழமான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளன. 7-வது வீரராக களமிறங்கி மார்கஸ் ஸ்டாய்னிஸ், பந்துகளை எந்த ஒரு பிழையுமின்றி சிறப்பாக அடிக்கிறார். அனைத்து அணிகளிடமும் ஆழமான பேட்டிங் வரிசை இருப்பதால், சிஎஸ்கே பந்துவீச்சை வலுப்படுத்த வேண்டியிருக்கும்.

இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே நன்றாக விளையாடினார். மூன்றாவது வீரராக களமிறங்குவது அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் ஆயுஷ் மாத்ரே பின்வரிசையில் களமிறங்கி விளையாடியிருக்கிறார். ஆனால், 3-வது வீரராக களமிறங்குவது அவருக்கு பொருத்தமான இடமாக உள்ளது.

முதல் போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த ஆயுஷ் மாத்ரே, அதனால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இரண்டாவது போட்டியில் அதிரடியாக விளையானார். இதுதான் அடுத்த தலைமுறை இளைஞர்களின் மனநிலை. அவர்கள் கடந்த காலம் குறித்து அதிகம் யோசிக்காமல் நிகழ்காலத்தில் கவனம் செலுத்துகின்றனர் என்றார்.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் சின்னசாமி திடலில் நாளை (ஏப்ரல் 5) நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The former captain of the Indian team has stated that only one thing is going to be a cause for concern for the Chennai Super Kings throughout this entire season.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.