தாமஸ்மலையை சுற்றுலாத் தலமாக்க பரிசீலனை: மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜன.9: சென்னை புனித தாமஸ் மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என கிறிஸ்துவர்கள் விடுத்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். புனித தாமஸ்மலை தி
சென்னை, ஜன.9: சென்னை புனித தாமஸ் மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என கிறிஸ்துவர்கள் விடுத்த கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புனித தாமஸ்மலை திருத்தலம் தேசிய திருத்தலமாக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புனித தாமஸ் மலை திருத்தலமானது தேசிய திருத்தலமாக அறிவிக்கப்பட்டு, அவ்வாறு தேசியத் திருத்தலமாக உயர்த்தப்படும் நிகழ்ச்சி தற்போது இங்கு நடைபெறுகிறது. 2003 ஆம் ஆண்டு இந்த ஆலயம் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. ஜீலை 2010ல் தமிழக ஆயர் பேரவை இதனை தமிழக திருத்தலமாக உயர்த்தி அறிவித்தது பெருமைப்படத்தக்கது. அகில இந்திய ஆயர் பேரவை இந்த இடத்தை தேசிய திருத்தலமாக அறிவித்துள்ளது. அதற்கான விழா இன்று நடைபெறுகின்றது.
அன்பு, பரிவு, சகிப்புத்தன்மை ஆகியவற்றை மனித குலத்திற்கு போதித்த, இயேசு கிருஸ்துவின் கொள்கைகளை உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று போதித்து, கிருஸ்துவ மதத்தை பரப்பிய, கிருஸ்துவின் நற்செய்திகளை மக்கள் சமுதாயத்திற்கு தெரிவித்த, தூதர்களில் புனித தாமஸ் சிறப்பான புகழுக்கு உரியவர். இவர் கி.பி.52ல் இந்தியாவிற்கு வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில், அப்போது மயிலை என்று அழைக்கப்பட்ட சென்னையின் தற்போதைய மயிலாப்பூர் பகுதிகளில் இவர் இயேசு கிருஸ்துவின் போதனைகளை போதித்தார். அதன் பிறகு, சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை எனப்படும் சிறிய குன்றில் இவர் தவம் இருந்தார் என்றும், பிறகு புனித தாமஸ் மலை என்று அழைக்கப்படுகின்ற இந்த மலையில் தங்கியிருந்தார் என்றும், இந்த இடத்திலேயே அவர் ரத்தம் சிந்தி இயற்கை எய்தினார் என்றும், நாம் அறிவோம்.
சாந்தோமில் அமைந்துள்ள தேவாலயம், இந்த மலையில் அமைந்துள்ள ஆலயம் ஆகியவை புனித தாமஸின் வரலாற்றுச் சின்னங்களாக இன்றும் நிலைபெறுகின்றன. இந்த இடத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்காக பணிகள் நடைபெற்றபோது, மேரி மாதாவின் உருவம் அடைந்த ஓவியம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அன்னை மரியாள் என்ற பெயரில் பழைய ஆலயம் அழைக்கப்பட்டது என்பதற்கு இது சான்று. இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள புனித தாமஸுடைய விரல் எலும்பு. இது அவருடைய தொண்டினை, சேவையை மற்றும் நினைவை நமக்கு தொடர்ந்து ஞாபகப்படுத்தும் ஒரு பழமையான நினைவுப் பொருளாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஏறத்தாழ 250 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல ஓவியங்கள் உள்ளன.
தேசியத் திருத்தலமாக இன்று உயர்த்தப்பட்டுள்ள புனித தாமஸ்மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வேண்டும் என்று கிறிஸ்துவ மக்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதனைப்பற்றி ஏற்கனவே முதல்வருடன் கலந்து ஆலோசித்து உள்ளேன். நீங்கள் அனுப்பிய வரைவுத்திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது சட்டப்பேரவை நடைபெறும் நேரம். எந்த ஒரு திட்டத்தையும் சட்டப்பேரவையில் தான் அறிவிக்க வேண்டும். எனவே, எனது உறுதியினை மட்டும் அரசின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.