அம்பை அருகே 4 வயது மகனை கொன்ற தந்தை கைது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சனிக்கிழமை 4 வயது மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சனிக்கிழமை 4 வயது மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
அம்பாசமுத்திரம் அருகே அடைச்சாணி செட்டியார் தெருவை சேர்ந்த பிரம்மநாயகம் மகன் கிருஷ்ணன் என்ற டேவிட் (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூரணம். இத்தம்பதிக்கு 4 வயதில் மோசஸ் என்ற மகன் உள்ளான்.
சனிக்கிழமை பூரணம் அடைச்சாணியில் நடைபெற்று வந்த தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வேலைக்கு செல்லும்போது தனது மகனையும் அழைத்து சென்றிருந்தார். மதியம் மனைவி வேலை செய்யும் இடத்திற்கு வந்த கிருஷ்ணன் தனது மகனை வீட்டிற்கு அழைத்து வந்தாராம்.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு பூரணம் சாப்பிட வந்தாராம். அங்கு மகன் மோசஸ் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. கிருஷ்ணன்டேவிட் மகனை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணன்டேவிட் மனநிலை பாதித்து தனது மகனை கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து பாப்பாக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து கிருஷ்ணன்டேவிட் கைது செய்து விசாரணை நடத்தினர்.