சேரன்மகாதேவியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி?
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புதன்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் இறந்தான்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் புதன்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் இறந்தான்.
திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியிலும், அம்பாசமுத்திரம் வட்டத்தில் பேரூராட்சி, கிராம ஊராட்சிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து அடிக்கப் பட்டது. வீடு வீடாக உள்ளாட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இருந்த போதிலும் அவ்வப்போது காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழந்து வருவதாக புகார் எழுந்தது. அண்மையில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சியில் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமிகள் இருவர் இறந்தனர். சுகாதாரப் பணிகளில் தீவிரம் காட்டி வந்த போதிலும் இதுபோன்ற உயிரிழப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்யவில்லை. ஆனால் பகலில் வெப்பமும், இரவில் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலை மாற்றத்தினால் வைரஸ் காய்ச்சல் பெரியவர், சிறியவர் என அனைவரையும் பாதித்துள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனிடையே சேரன்மகாதேவியில் காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவன் புதன்கிழமை இறந்தான். ஆழ்வார்குறிச்சி அருகே சம்பன்குளத்தை சேர்ந்த சாதலி. இவர் சேரன்மகாதேவியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
சேரன்மகாதேவி சத்யமூர்த்திநகரில் வசித்து வந்த இவரது 5 வயது மகன் அப்துல்லா கடந்த சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. புதன்கிழமை திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல்லா அங்கு இறந்தார்.
அப்துல்லா டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து முறையாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். காய்ச்சல் ஏற்பட்டு சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.