கடலில் குளித்த காரைக்கால் பள்ளி மாணவர் சாவு
காரைக்காலில் கடலில் நண்பர்களுடன் இறங்கி குளித்த பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
காரைக்காலில் கடலில் நண்பர்களுடன் இறங்கி குளித்த பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
காரைக்கால் மீராப்பள்ளித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிராஜ்தீன் மகன் முகமதுசாகிர் (13). காரைக்காலில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் நண்பர்கள் 5 பேராக சேர்ந்து கருக்களாச்சேரி பகுதிக்கு சென்று கடலில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது வந்த அலையில் முகமதுசாகிர் சிக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளார். நண்பர் ஒருவர் அவரை இழுக்க முயன்று பலனிக்காததால் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நிரவி காவல்நிலைய போலீஸார், கடலோரக் காவல்நிலைய போலீஸார் உதவியுடன் கடலில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருள் சூழ்ந்த நிலையில் அன்றைய தினம் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை முகமதுசாகிர் உயிரிழந்த நிலையில் அதே பகுதியில் கரை ஒதுங்கிக் கிடந்தார். போலீஸார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பிறகு உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து நிரவி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் குமரேசன் நண்பர்களுடன் காரைக்கால் கடலில் குளித்தபோது, மூழ்கி உயிரிழந்தார். அடுத்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த 2-வது சம்பவமாகும் இது.