முகப்பு
தற்போதைய செய்திகள்

துரை தயாநிதி மீது தவறு இருந்தால் நானே சரண் அடையச் சொல்லியிருப்பேன்: மு.க.அழகிரி

துரை தயாநிதி மீது  தவறு இருப்பதாக எனக்குத் தெரிந்தால், அவரை உடனே நீதிமன்றத்தில் சரண் அடையும்படி நானே சொல்லியிருப்பேன் என்றார் மு.க.அழகிரி.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

துரை தயாநிதி மீது  தவறு இருப்பதாக எனக்குத் தெரிந்தால், அவரை உடனே நீதிமன்றத்தில் சரண் அடையும்படி நானே சொல்லியிருப்பேன் என்றார் மு.க.அழகிரி.

மதுரை மாவட்டம் மேலூருக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று வந்திருந்தார். தனது மகன் துரை தயாநிதி சரண் அடைதல் தொடர்பாக அங்கு வந்திருந்த அவர், மேலூருக்கு வெளியே நாடாளுமன்ற உறுப்பினருக்கான அவரது அலுவலகத்தில் தங்கினார். துரை தயாநிதி சரண் தொடர்பாகவும், அவருடைய பாஸ்போர்ட் ஒப்படைக்கப்பட்டது தொடர்பாகவும் காத்திருந்து தகவல்களைக் கேட்டறிந்தார். அவருடன் 20க்கும் மேற்பட்ட கார்களில் திமுகவினர் வந்திருந்து மேலூர் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

துரை தயாநிதி எங்கும் ஓடிவிடவில்லை. அவருடைய பாஸ்போர்ட்டைப் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கே உங்கள் முன் காட்டியிருக்கிறேன். இது நீதிமன்றத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

துரை தயாநிதி மீது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. துரை தயாநிதி ஒலிம்பஸ் நிறுவனத்தின் பங்குதாரர் பொறுப்பில் இருந்து கடந்த 2010ம் ஆண்டே விலகிவிட்டார். அதன் பிறகு அவருக்கும் அந்த நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

உண்மையில் துரை தயாநிதி மீது குற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றினால், நானே அவரை சரண் அடையச் சொல்லியிருப்பேன். ஆனால், அரசியல் ரீதியாக இந்த வழக்கு போடப்பட்டதால், சட்ட ரீதியாக இதை அணுக முடிவு செய்தோம். எனவே சட்ட வல்லுநர்களைக் கலந்து அதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்தோம். இந்த வழக்கை நாங்கள் சட்ட ரீதியாகவே அணுகுவோம்.

ஒரு நாடாளுமன்ற எம்.பி. என்ற வகையில் இந்தத்தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்குக்  கூட இந்த அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இருந்தபோதும் அதையும் மீறி இங்கே பல பணிகளைச் செய்கிறேன். இங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஆய்வகம், பெஞ்ச் இருக்கைகள் என அனைத்தையும் வாங்குவதற்கு என் தொகுதி நிதியில் இருந்து அடுத்த வருடம் அளிக்க ஏற்பாடு செய்வேன்.

மதுரை துரந்தோ ரயில் தொடர்பாக அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அதற்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் உதவினார். அதுபோல், திருச்சியில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு இரட்டை ரயில் பாதை பணிகள் தொடர்பாக வலியுறுத்தி வருகிறேன். விரைவில் அதுவும் சரியாகும்.

- இவ்வாறு செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.

முழு கட்டுரையைப் படிக்க →