எம்எல்ஏ போராட்டம் எதிரொலி: வீராணத்திலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதை அடுத்து கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து வியாழக்கிழமை காலை பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதை அடுத்து கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து வியாழக்கிழமை காலை பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் 1லட்சத்து 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நீரின்றி காய்ந்து வருகின்றன. இந்நிலையில் பயிரினை காப்பாற்ற வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் பஸ் நிலையம் முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் செல்போனில் தொடர்பு கொண்டு புதன்கிழமை ஏரியிலிருந்து நீரை திறந்து விடுவதாக தெரிவித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்ட்டது.
இதனையடுத்து வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு 28 மதகுகள் வழியாக 400 கனஅடி நீர் வியாழக்கிழமை காலை திறந்துவிடப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து பாசனத்தி்ற்கு நீர் திறந்துவிடப்பட்டதால் பூத்து பால்விடும் நிலையில் உள்ள பயிர்களுக்கு இந்த நீர் தேவையானது என்பதால் வீராணம்ஏரிப் பாசனப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 43.05 அடியாகும் (மொத்தக் கொள்ளளவு 47.50அடி). கீழணையில் 8 அடி நீர் உள்ளது (மொத்தக் கொள்ளளவு 9 அடி). கீழணையிலிருந்து வடவாற்றின் வழியாக ஏரிக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement