டெல்டா பகுதியாக அறிவிக்க கோரி ஸ்ரீமுஷ்ணத்தில் போராட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தை காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கக் கோரி இன்று கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணத்தை காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கக் கோரி இன்று கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
காவிரி டெல்டா பகுதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இன்று கடையடைப்பு, சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. மேலும் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் இன்று தொடங்கியுள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் பிர்க்கா கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி டெல்டா பகுதியாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது டெல்டா பகுதி இல்லை என அரசு ரத்து செய்ததை பரிசீலித்து மீண்டும் டெல்டா பகுதியாக அளித்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீமுஷ்ணம் பிர்க்கா காவிரி டெல்டா உரிமை பாதுகாப்புக்குழு மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கடை அடைப்பு நடத்தப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீமுஷ்ணத்தில் அனைத்து கடைகளும் வியாழக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. பின்னர் விவசாயிகள் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் தமிழக விவசாயிகள் சங்க வெங்கடகிருஷ்ணன், விவசாயிகள் முன்னேற்ற தங்க ஆனந்தம், கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் ஆதிமூலம், காமராஜ், ராமச்சந்திரன், லட்சுமணன் உளளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் தில்லைகோவிந்தன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விவசாயிகள் மறியலை கைவிட்டு, ஸ்ரீமுஷ்ணம் பிர்காவை டெல்டா பகுதியாக மீண்டும் அறிவிக்கும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement